Thursday 25 August 2016

ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

Blog எழுதி பல நாட்கள் ஆகின்றன. அதனாலேயே என்ன எழுத எப்படி எழுத என எந்த யோசனைகளும் எழவில்லை. எதோ என் மனதில் ஓடி கொண்டிருக்கும் யோசனைகளை பிரதிபலிக்கிறேன்.
நா.முத்துக்குமாரின்  மரணம் சமீபமாக என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயம். அவரை நினைக்கையில் நெஞ்சம் எங்கும் ஜனனி முகம். இன்று காலை அலுவலகத்திற்கு செல்ல புறப்பட்டு நிற்கும் எனது கால்களை சூழ்ந்து கொண்டு நின்றாள் ஜனனி. கண்கள் தண்ணீர் குட்டைகளாக தென்பட்டன. பிறந்து இந்த ஒன்றரை வருடங்களில் இது தான் முதல் தடவை. என்றும் என்மேல் புன்னகை மலர்கள் தூவி வழி அனுப்பும் அந்த கண்களில் இன்று கலங்கிய நீர். என்றும் காற்றாடி போல சுழன்று சுழன்று விடை கொடுக்கும் கைகள் இன்று என் சட்டையை கசக்கின. அலுவலகம் செல்ல மனமில்லை என்றாலும் “சீக்கிரம் கிளம்பு” என்று நான் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இருந்தும் இன்னும் 8 மணி நேரம் தானே. அதன பிறகு நான் செல்லும்போது அவள் தூக்கத்தில் இருப்பாள். கண்விழித்ததும் முதல் சொல் “அப்பா” அல்லது “கண்ணா” ஒரு புன்சிரிப்புடன். அந்த உணர்வுக்கு நிகராக எந்த பதவியும் செல்வமும் இல்லை.
தகப்பன் என்ற உரிமை எத்தனையோ பாடங்களை கற்று தந்தது. பெற்றோர்கள், அறிவுமிக்க ஆசிரியர்கள், அனுபவம் மிக்க பெரியவைகள் என பலரும் சொல்லி தந்து புரியாத வாழ்கையை தனக்கு என்ன வேண்டமென்றே சொல்ல தெரியாத அந்த உயிர் எனக்கு கற்று தந்தது. பொறுப்பு, விவேகம், பாசம், பயம், அரவணைப்பு என்று பல உணர்வுகள். இந்த உணர்வுகளை நான் முன்பு கண்டறிந்தாலும் அதன் உண்மையான உணர்ச்சிகளை இப்போது தான் உணர்கிறேன். தாய்வயிற்றில் இருக்கும் தருணத்தில் குடும்பம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தாள். நண்பர்களை சுற்றி மட்டுமே இருந்த வாழ்க்கையில் “குடும்பம்” என்ற ஒரு உணர்வை ஊட்டினாள்.  பிறந்ததும் அவளை கைகளில் பற்றி கொள்கையில் “பொறுப்பு” என்ற ஒரு பாடம். அவளை உச்சிமுகர்ந்து முத்தம் பரிசளிக்கையில் “பாசம்” என்ற ஓர் பாடம். முதல் அழுகையின் பொழுது எப்படி நிப்பாட்டுவது என்று தெரியாமல் “பதற்றம்” என்ற ஒரு உணர்வு. தந்தையாக இருந்து நான் தான் அவளை பாதுகாக்க வேண்டும். அனால் “அப்பா” என்ற முதல் சொல்லில் எனக்கும் என் மனைவிக்கும் துணையாக ஒரு ஜீவன் இருக்கிறது என்று “பாதுகாப்பு” உணர்வு.
“ஆனந்த யாழை…” பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல். தாய்வயிற்றில் இருக்கையிலே அந்த பாடல் ஒலிக்கையில் அவள் அசைவாள். உலகிற்கு வந்த பிறகும் அப்படி தான். அதில் நடுவில் அந்த குழந்தை “அப்பா” என்று அழைக்கும் ஒரு காட்சி. அதை காணும் பொழுது ஜனனி என்னை நோக்கி சிரித்து கட்டி பிடித்து முத்தமிடுவாள். அந்த தழுவலில் கண்டேன் “அன்பு அரவணைப்பு” எனும் மற்றொரு பாடம். இதனை நாட்கள் சம்பளம் வாங்கி காசு சேர்த்திருந்தாலும் அவளுக்காக காசு சேர்த்து வாங்கின முதல் கொலுசில் “சேமிப்பு” என்ற ஒரு பாடம். சாப்பிட அடம் பிடிக்கும் அவளுக்கு கதைகள் சொல்லி ஊட்டுகையில் “அக்கரை” எனும் உணர்வு. பிறகு வீண் அடம் பிடிக்கும் அவளிடம் செல்ல கோபம் பூண்டு அழுவது போல் நடிக்கையில் “அப்பா அலால அலால” என்று அவள் கண்களை துடிக்கையிலும் என் அழுகை நிஜம் என்று எண்ணி அவளும் அழுகையில் “கள்ளம் கபடமற்ற உள்ளம்” என்பது என்னவென்று கண்டு கொண்டேன். அவள் தனியாக நடைபழகி எடுத்து வைத்த முதல் அடி “தன்னம்பிக்கை” ஊட்டியது. என் கை பற்றி மாடிப்படிகள் ஏற முயற்சித்தது “தைரியத்தை” கற்று தந்தது. இன்னும் சொல்ல போனால் சொல்லி கொண்டே போகலாம். அவள் முதல் சொல் பேசுகையில், அவள் புத்தகத்தில் படங்கள் பார்த்து பல விஷயங்கள் அறிந்து கொள்கையில் “பெருமை”, “வியப்பு” என்றும் உணர்வுகள்.
நான் இசைஞானியின் தீவிர ரசிகன். அதற்காகவே அடம் பிடித்து வீட்டில் உள்ளவர்களிடம் வாதம் பண்ணி “ஜனனி” என்ற பெயர் வைத்தேன். ஜனனி என்றால் அம்மா. எனது தாய் எனக்கு பல பாடங்கள் கற்று தந்தாலும் அதில் சிலதை மட்டும் மனதில் கொண்டு பலதை காற்றில் பறக்க விட்டிருக்கிறேன். ஆனால் இவளோ எனது தாய்க்கு நிகராக பல பாடங்களை கற்று தந்தாள். அதுவும் அவளுக்கு என்ன வேண்டுமென்ற கேட்க தெரியாத ஒரு வயதில். உண்மையில் Parenting  என்று வாழ்க்கையில் வரும் இந்த பாடம் மிகவும் சந்தோசம் அளிக்கும் ஒரு பாடமவே இருக்கிறது.
“உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி”

4 comments:

  1. Thaipasam endral enna...anaivarum arindhadhey...appakal vaivittu solvadhillai.adhanal evarum arivadhillai...indha katturayai padithal theriyum anaivarukum thandhayin pasam enna vendru! !!

    ReplyDelete
  2. ரொம்ப அழகான பதிவு.
    I can relate all of these with my father and also teaches me so many things. Wonderful

    ReplyDelete