A simple introvert who likes to confine his world to books and family away from the maddening crowd.. நான் யார்? இன்னும் என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்..... கடல் அலைகளால் சேதப்பட்டு கிடக்கும் வீட்டை தேடி அலையும் சிறு நண்டுபோல் தேடி திரிகிறேன்!!! கடல் மணலில் பதித்த எனது பெயரையும் காலடிதடத்தையும் தொலைத்து விட்டு இன்னும் தேடி அலைகிறேன்!!! பிடித்தவை - தனிமை, ஓவியம், புத்தகம், கோவில்கள், கடல் அலைகள், இயற்கை, குடும்பம், கவிதைகள், இசைஞானியின் இசை
Friday, 28 February 2025
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - புத்தக விமர்சனம்
Thursday, 29 February 2024
பசி - நட் ஹாம்சன் - புத்தக விமர்சனம்
இந்த வருடம் புத்தக கண்காட்சியில் வாங்கினது இந்த புத்தகம். இதை பற்றி நான் முன்னதாக கேள்விப் பட்டதில்லை என்றாலும் இந்த அட்டைப்படம் எனக்கு பிடித்திருந்தது. கா.நா.சு வின் மொழி பெயர்ப்பு என்பதால் வாங்கி படித்து பார்ப்போமே என்ற ஒரு ஆவல்.
ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே இந்த புதினம். ஒரு ஏழையான எழுத்தாளர்நோர்வேயில் உள்ள ஒரு நகரத்தில் வசித்து வருகிறான். தன் வீட்டு வாடகை கூட கட்ட வழியில்லாத ஏழை. சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல் அவஸ்தை படுகிறான். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தின் மேல் சிறிய மரக்கட்டைகளை வாயிலிட்டு உரியுறான் தன பசியை போக்கிக்கொள்ள. தனது தொழில் தொடர காகிதங்களோ, பென்சிலோ கூட வாங்க வழியில்லாமல் தனது கோட்டின் பொத்தானை பிரித்து விற்கும் அளவிற்கான கஷ்டம். ஒரு கட்டத்தில் அவன் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக கூட நடந்துகொள்கிறான். அவன் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள், சம்பவங்கள், பசி, இருட்டில் வெளிச்சமாய் சிறிய ஒரு காதல் என்று பல அத்தியாயங்கள் தான் இந்த பசி.
ஒரு வித்தியாசமான வாசிப்பு. ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றிய கதை சில பக்கங்கள் தாண்டி அந்த கதைக்குள் என்னை கொண்டு சென்றது. அந்த எழுத்தாளனின் வாயிலாகவே நாம் இந்த கதையா; அதாவது அவன் வாழ்க்கையை பார்க்கிறோம். பசி மற்றும் குளிர் வாட்டி எடுக்கும் தருணங்களை மிகவும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கதையின் ஆசிரியர். காசில்லாத ஒரு மனிதன் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறான் என்று தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. என்ன தான் ஏழ்மை அவனை வாட்டினாலும் நல்ல இருந்த நேரத்தில் வாழ்ந்த வாழ்க்கயே வாழ நினைக்கிறார். நண்பர்களிடம் உதவி கேட்க வெட்கப்படுகிறார், அத்தோடு சந்தோஷமாக இருப்பது போல் அவர்களிடம் பிரஸ்தாபிக்கிறார். தான் கஷ்டப்படும் போதும் மற்றவர்களுக்கு சிறு உதவிகள் புரிவது உதவும் மனப்பான்மையை விட தன்னை ஒரு வசதியானவர் என்று காட்டிக்கொள்ளவே என்றுதான் யோசிக்க தோன்றுகிறது. நடுவில் வரும் காதல் பகுதி மென்மையாக வந்து அதே போல சென்று விடுகிறது. சில நேரங்களில் மனச்சிதைவுக்கு உள்ளாகும் தருணங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. க.நா.சு -வின் மொழிபெயர்ப்பு மிகவும் கச்சிதமாக உள்ளது. அந்த கதாபாத்திரத்தின் அனுபவங்கள் துல்லியமாக மொழிபெயர்த்துள்ளார் க.நா.சு.
இந்த புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பசியின் கொடுமை ஒரு மனிதனை எப்படி எல்லாம் ஆட்கொள்ளும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த புதினம் கண்டிப்பாக வாசிக்க படவேண்டிய ஒன்று தான்.
Tuesday, 20 December 2022
பாத்தும்மாவின் ஆடு - வைக்கம் முஹம்மது பஷீர் - புத்தக விமர்சனம்
பஷீர் மலையாளம் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பவர். அவர் எழுதிய "நீலவெளிச்சம்" மற்றும் ஒரு சில குட்டி கதைகளை மலையாள மொழியிலேயே படித்ததுண்டு. இந்த புத்தகத்தின் கதை ஓரளவுக்கு தெரியும் என்பதால் தமிழ் மொழி பெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்க்கே இந்த புதினத்தை வாசித்தேன்.
நீண்ட நாள் பிரயாணத்தின் பிறகு பஷீர் அவர் வீட்டிற்கு வருகிறார். பஷீர் அவர்களின் வாழ்க்கையில் நடந்தாக சொல்ல படும் விஷயங்களை கொண்டதே இந்த புத்தகம். அவரது சகோதரியான பாத்தும்மாவின் ஆடானது எதை கிடைத்தாலும் தின்னும். அவரது புத்தகங்களை கூட. அதை மையமாக வைத்து தனது அம்மா, சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய வாழ்க்கை - இதையெல்லாம் பற்றி வேடிக்கையாக பஷீர் சொல்வதே இந்த புத்தகம்.
பஷீரிடம் எனக்கு பிடித்ததே அவரின் மொழி மற்றும் கதை சொல்லும் விதம் தான். இலக்கியம், இலக்கணம் அல்லாமல் எதோ பக்கத்துக்கு வீடு மனிதர் ஒருவர் நம்முடன் பேசி, கதைகள் சொல்வது போன்ற ஒரு உணர்வு அளிப்பது பஷீரின் தனித்துவம். எதையும் நகைச்சுவையாக சொல்லும் திறமை அவரிடம் உள்ளது. இந்த புத்தகத்தில் கூட ஆடு அவர் புத்தகங்களை தின்னும் பொழுது " நீ அதை வேண்டுமானால் சாப்பிட்டுக்கொள், நான் மறுபிரதி போட்டுக்கொள்வேன்; ஆனால் என் கம்பளி புதப்பை தின்றுவிடாதே, எனக்கு அது ஒன்றே உள்ளது" என்பது அவரின் எழுத்துக்களின் அழகை குறிக்கின்றது. தனது வாழ்க்கையின் கஷ்டங்களை கூட ஹாஸ்யமாக எழுதியிருப்பார். பள்ளிப்பெண்களிடன் அவர் நடத்தும் உரையாடல் கூட எனக்கு சிரிப்பை தந்தது. ஒரு புதினம் என்றல்லாமல் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சிறு கதைகளாக நமக்கு தந்திருக்கிறார். இந்த கதையை அந்த தன்மை மாறாது மொழிபெயர்க்க பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது.
Wednesday, 10 March 2021
வெண்ணிற இரவுகள் - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி - புத்தக விமர்சனம்
பிற மொழி நூல்களில் என்னை எப்பொழுதும் ஈர்த்த ஒன்று ரஷ்ய சாகித்யம். சிறு வயதில் வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்பு கதைகள் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்பொழுது ரஷ்ய புதினங்களையும் சிறுகதைகளையும் வாசிக்க நினைக்கையில் எத்தனை பிரபலமான பெயர்கள் - டால்ஸ்டாய், அன்டன் செகோவ், கோர்க்கி, தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின் என்று உலக சாகித்யத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள். அதில் நான் முதலாவதாக தேர்ந்தெடுத்து இந்த வாசிப்பு. நாகர்கோயில் புத்தக கண்காட்சியில் வாங்கிய இந்த சிறு புதினத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன் - ரஷ்ய சாகித்ய உலகத்திற்குள் எனது முதல் படி.





