Tuesday 20 December 2022

பாத்தும்மாவின் ஆடு - வைக்கம் முஹம்மது பஷீர் - புத்தக விமர்சனம்

 

                    பஷீர் மலையாளம் இலக்கிய உலகில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பவர். அவர் எழுதிய "நீலவெளிச்சம்" மற்றும் ஒரு சில குட்டி கதைகளை மலையாள மொழியிலேயே படித்ததுண்டு. இந்த புத்தகத்தின் கதை ஓரளவுக்கு தெரியும் என்பதால் தமிழ் மொழி பெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்க்கே இந்த புதினத்தை வாசித்தேன்.

                    நீண்ட நாள் பிரயாணத்தின் பிறகு பஷீர் அவர் வீட்டிற்கு வருகிறார். பஷீர் அவர்களின் வாழ்க்கையில் நடந்தாக சொல்ல படும் விஷயங்களை கொண்டதே இந்த புத்தகம். அவரது சகோதரியான பாத்தும்மாவின் ஆடானது எதை கிடைத்தாலும் தின்னும். அவரது புத்தகங்களை கூட. அதை மையமாக வைத்து தனது அம்மா, சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய வாழ்க்கை - இதையெல்லாம் பற்றி வேடிக்கையாக பஷீர் சொல்வதே இந்த புத்தகம்.

                    பஷீரிடம் எனக்கு பிடித்ததே அவரின் மொழி மற்றும் கதை சொல்லும் விதம் தான். இலக்கியம், இலக்கணம் அல்லாமல் எதோ பக்கத்துக்கு வீடு மனிதர் ஒருவர் நம்முடன் பேசி, கதைகள் சொல்வது போன்ற ஒரு உணர்வு அளிப்பது பஷீரின் தனித்துவம். எதையும் நகைச்சுவையாக சொல்லும் திறமை அவரிடம் உள்ளது. இந்த புத்தகத்தில் கூட ஆடு அவர் புத்தகங்களை தின்னும் பொழுது " நீ அதை வேண்டுமானால் சாப்பிட்டுக்கொள், நான் மறுபிரதி போட்டுக்கொள்வேன்; ஆனால் என் கம்பளி புதப்பை தின்றுவிடாதே, எனக்கு அது ஒன்றே உள்ளது" என்பது அவரின் எழுத்துக்களின் அழகை குறிக்கின்றது. தனது வாழ்க்கையின் கஷ்டங்களை கூட ஹாஸ்யமாக எழுதியிருப்பார். பள்ளிப்பெண்களிடன் அவர் நடத்தும் உரையாடல் கூட எனக்கு சிரிப்பை தந்தது. ஒரு புதினம் என்றல்லாமல் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சிறு கதைகளாக நமக்கு தந்திருக்கிறார். இந்த கதையை அந்த தன்மை மாறாது மொழிபெயர்க்க பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது.

                    சிரிப்புடன் சிந்தனையும் ஊட்டுவது என்பது எல்லோராலும் முடிந்த ஒன்றல்ல. அதை திறம் பட செய்தவர் பஷீர். இயல்பான எழுத்துக்களை விரும்புகிறவர்கள் நிச்சயம் ரசிக்கும்படியான ஒரு புத்தகமே இந்த "பாத்தும்மாவின் ஆடு".


2 comments: