Monday 12 February 2024

கன்னிகள் ஏழுபேர் - இந்திரா சௌந்தர்ராஜன் - புத்தக விமர்சனம்

 


               நான் அதிகமாக படித்த ஒரு எழுத்தாளர் என்றால் அது இந்திரா சௌந்தர்ராஜன் தான். சிறு வயதில் தொலைக்காட்சியில் அவர் கதைகளை தழுவிய பல நாடகங்களை பார்த்ததாலோ என்னமோ தெரியவில்லை. சற்றுவேகமான நடை கொண்ட, அதே நேரத்தில் பல விஷயங்களை சொல்கின்றதாக அவர் கதைகள் அமையும். இந்த வருடம் வாசிப்பு ஆரம்பித்ததே இந்த புதினத்தில் இருந்து தான்.

                சிவன்கோவில் குருக்களாக இருக்கும் சாமிநாத குருக்களுக்கு ஏழு பெண்பிள்ளைகள். யாருக்குமே இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனக்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. அதே போல தனது பெண்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று எப்பொழுதும் மனக்குழப்பமாகவே இருக்கிறார். நாடி ஜோதிடம் பார்த்த போது அவருடைய பெண்கள் சப்தகன்னியர்கள் என்றும் கன்னிப்பட்டி  என்ற ஊரில் சென்ற கோவில் எழுப்பினால் எல்லாம் தானாகவே நல்லதாய் அமையும் என்று அறிந்து கொள்கிறார். சாமிநாத குருக்களும் அவரது நண்பரும் அங்கு செல்ல; அந்த ஊரில் பற்பல மர்மங்கள். சப்தாகன்னியர் சிலைகளையே காணவில்லை. அந்த ஊரின் மர்மங்கள் உடைக்கப்பட்டது, சிலைகள் மீட்கப்பட்டு கோவில் எழுப்பப்பட்டதா, அந்த பெண்கள் வாழ்வில் சந்தோசம் மலர்ந்தது என்பதே இந்த புதினம்.

                எப்பொழுதும் போல் வித்தியாசமான ஒரு கதைக்களம். ஆன்மீகம் சார்ந்தது. அவருடைய மற்று புத்தகங்களில் காணும் அதே நடை தான் இந்த புதினத்திலும். கதை ஒரு பக்கமாக நகரும் அவர் ஆன்மீகத்தை பற்றி சொல்லும் கருத்து போன்றது தனியாக இடைக்கலர்ந்து வரும். இந்த புத்தகத்திலும் ஆன்மீகம், நாத்திகம், கடவுள் வழிபடு என்று பல விஷயங்களை பேசியுள்ளார். புதினத்தின் முக்கியமான பலமே கதை தான். என்றாலும் சற்று வேகம் தளர்ந்த எழுத்து. கதையின் நடுபாகம் வரும்போது வீணாக கதையை வளர்க்க நினைப்பது போன்ற ஒரு உணர்வு. கதையின் பாத்திரங்கள் சற்று அதிகமாகவே இருந்தார்கள். இருந்தாலும் தேவையான பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினையே அங்கு தான். கருத்துக்களை ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் பகுதியில் சொன்னாலும் எழுத்தாளர் சில கதைமாந்தர்களின் வாயிலாக மீண்டும் எடுத்துரைக்க நினைக்கிறார். அது சலிப்பை தான் அளிக்கிறது. 

                மொத்தத்தில், வேகமற்ற ஒரு நடையால் பாதிக்கப்பட்ட ஒரு நல்ல கதை என்றே இந்த புதினத்தை சொல்லலாம்.  கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் மற்ற இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்களை போலவே  வாசிக்கமுடிந்த ஒரு புத்தகம்.






இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்கள் - எனது விமர்சனங்கள் 

ஐந்து வழி மூன்று வாசல் ஐந்து வழி மூன்று வாசல் - புத்தக விமர்சனம்

விட்டு விடு கருப்பா - விட்டு விடு கருப்பா - புத்தக விமர்சனம்

ஆனந்த தாண்டவம் -  ஆனந்த தாண்டவம் - புத்தக விமர்சனம்

கோட்டைபுரத்து வீடு - கோட்டைபுரத்து வீடு - புத்தக விமர்சனம்

வானத்து மனிதர்கள் - வானத்து மனிதர்கள் - புத்தக விமர்சனம்

விக்ரமா விக்ரமா (பாகம் 1) - விக்ரமா விக்ரமா (பாகம் 1) - புத்தக விமர்சனம்

No comments:

Post a Comment